

புது தில்லி: குடியரசுத் தலைவர் மாளிகையிலோ அல்லது தோட்டப் பகுதியிலோ பணியாற்றும் எந்த ஊழியருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய தில்லியைச் சேர்ந்த ஒருவர் கரோனா பாதித்து பிஎல் கபூர் மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி மரணம் அடைந்தார். அவர் குடியரசுத் தலைவரின் செயலக ஊழியரோ, குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியரோ அல்ல என்று குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
மரணம் அடைந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை கணக்கெடுத்த போது, அதில் ஒருவர் குடியரசுத் தலைவரின் செயலக ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நபர் உட்பட 7 பேர் கொண்ட குடும்பம் மந்திர் மார்க் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான வார்டுக்கு 16ம் தேதி மாற்றப்பட்டனர்.
அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், குடியரசுத் தலைவர் செயலகத்தின் ஊழியர் உட்பட அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
இதையடுத்தே, அந்த குடும்பத்தினர் வசித்து வந்த குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் இருக்கும் 115 வீடுகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தேதி வரை குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றும் எந்த ஊழியருக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு கரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.