

புது தில்லி: ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிகட்ட ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூ.7,500ஐ இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜக அரசுக்கு சொன்ன யோசனைகள் எதுவும் ஏற்கப்படவில்லை என்றும் சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.
புது தில்லியில் இன்று சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், நான் இப்போது உங்களுக்கு பகிரவிருக்கும் ஒரு தகவல் ஒவ்வொரு இந்தியரும் கவலைப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. கரோனா தொற்றை நாம் ஒன்றிணைந்து போராட வேண்டிய இந்த சூழ்நிலையிலும் கூட, பாஜக அரசு, தொடர்ந்து வெறுப்புணர்வு, சமுதாயத்தில் பிளவு எனும் தொற்றுகளைப் பரப்பி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஒற்றுமையை மத்திய அரசு சிதைத்து வருகிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி அதனை சீராக்க தொடர்ந்து கடுமையாகப் போராடி வருகிறது என்றும் கூறினார்.
ஊரடங்கு உத்தரவால் சுமார் 12 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான சூழ்நிலையைக் கையாள ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூ.7,500ஐ இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று சோனியா வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.