திருச்சி: கரோனா தொற்று நோயைத் தடுக்க திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டத்தை தமிழக முதல்வர் தொடக்கி வைத்துள்ளார்.
தமிழகஅரசு உத்தரவின்பேரில் திருச்சி மாநகராட்சியில் 2700 தூய்மை பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் கபசுரக்குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கியது. மேலும், 18 மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு கோட்ட அலுவலகங்களில் கபசுரக்குடிநீர் வைக்கப்படுகிறது. பொதுமக்களும் பயன்படுத்தலாம். மாநகராட்சியில் கபசுரக்குடிநீர் சூரணப் பொட்டலங்கள் தேவையான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கபசுரக்குடிநீர் சூரணம் ஒருநபருக்கு ஒருகிராம் அளவுக்கு 100 மில்லி தண்ணீரில் கலந்து 50 மில்லி அளவுக்கு சுண்டக் காய்ச்ச வேண்டும். பெரியவர்கள் 50 மில்லி வரை குடிக்கலாம். குழந்தைகளுக்கு 30 மில்லிவரை வழங்கலாம். மாநகராட்சி மைய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணங்களை ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி உதவி ஆணையர் தயாநிதி, சித்தமருத்துவர்கள் ரெத்னா, உஷாராணி மறறும் சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.