

இந்தியாவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 28,380 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,380 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 886 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,392 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருக்கிறது. இங்கு தற்போது 8,068 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து குஜராத்தில் 3,301 பேரும், தில்லியில் 2,918, மத்தியப் பிரதேசத்தில் 2,168 பேரும், ராஜஸ்தானில் 2,185 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம்(1955) மற்றும் தமிழகத்தில்(1885) பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது.
முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,396 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 28 நாள்களில் 16 மாவட்டங்களில் யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோன்று கடந்த 14 நாள்களில் 25 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 85 மாவட்டங்களில் ஒருவர் கூட கரோனா பாதிப்புக்கு ஆளாகவில்லை என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.