உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பலருக்கும் சமீபத்தில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இன்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் வழக்கில் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கியது குறிப்பிடத்தக்கது.