பிளாஸ்மா சிகிச்சை கரோனா பாதித்தவர்களுக்கு பெரிதளவில் பலனளிக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்பது எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது:
"இவை முதற்கட்ட ஆய்வுகள். பிளாஸ்மா சிகிச்சையின் பலன் குறித்து கண்டறிவதற்காக இரண்டு குழுக்களாக தலா 15 நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழுவினருக்கு கரோனா பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் நெறிமுறைகளுக்குள்பட்ட பொதுவான சிகிச்சை. மற்றொரு குழுவினருக்கு பிளாஸ்மா சிகிச்சையுடன், பொதுவாக அளிக்கப்படும் சிகிச்சையும் கொடுக்கப்பட்டது.
இதன் முடிவில், இரண்டு குழுக்களுக்கும் ஒரே அளவில் உயிரிழப்பு ஏற்பட்டு, நோயாளிகளுக்கு பெரிதளவில் மருத்துவப் பலன்கள் இல்லை என்பது தெரியவந்தது. அதேசயம், எந்தவொரு முடிவுக்கும் வர கூடுதல் ஆதாரங்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிளாஸ்மா சிகிச்சை பாதுகாப்பானது, நோயாளிகளுக்கு எவ்வித கெடுதலையும் ஏற்படுத்தவில்லை என்பதையே தற்போதைய ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. அதேசமயம், இது பெரிதளவில் பலனளிக்கக் கூடியதாகவும் இல்லை. எனவே, இதை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்." என்றார் ரண்தீப் குலேரியா.
பிளாஸ்மா சிகிச்சையின் பலன்கள் குறித்து கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) ஆய்வு நடத்தி வருகிறது. எனினும், அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.