பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விசாரணை முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை லக்னௌவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணையை விரைவில் முடித்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மே 8-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி சுரேந்தர குமார் யாதவ், தீர்ப்பளிக்க கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பளிக்க கூடுதலாக ஒருமாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.