குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதியளிப்பதில் மத்திய அரசுக்கு சிக்கல் இல்லை என பாஜகவின் கூட்டணி கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ஜேஜேபி தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான அஜய் சிங் இதுபற்றி தெரிவித்ததாவது:
"குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி திரும்பத் திரும்ப தெரிவிக்கின்றனர். அந்த (குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும்) ஒற்றை வரியைக் கூடுதலாக சேர்ப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று அரசில் இருப்பவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்."
வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் தொடர்ந்து 6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து ஜேஜேபியிடமிருந்து இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
முன்னதாக, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளிக்கும் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹனுமான பெனிவால் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.