பிஎம்-கேர்ஸ் நிதி எங்கே போனது? அதை ஏன் தணிக்கை செய்யவில்லை? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது:
"மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசின் விருப்பத்துக்கு இணங்க என்னுடைய அரசு செயல்படாது. பிஎம்-கேர்ஸ் நிதி எங்கே போனது? இந்த நிதியின் எதிர்காலம் குறித்து யாருக்காவது தெரியுமா? லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பணம் எங்கே? அதை ஏன் தணிக்கை செய்யவில்லை?
மத்திய அரசு எங்களுக்கு பாடம் எடுக்கிறது. கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள அவர்கள் எங்களுக்கு என்ன கொடுத்தார்கள்?
எங்களை அச்சுறுத்துவதற்காக மத்திய அரசு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. நாங்கள் அதுகுறித்து அஞ்சப்போவதில்லை. பாஜக அரசியல் கட்சியல்ல. அதுவொரு பொய்க் குப்பை."
மேற்கு வங்கத்தில் 294 பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது.