தில்லியில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு பிரபல மல்யுத்த வீரர் ’தி கிரேட் காளி’ ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் 7 நாட்களாக தலைநகர் தில்லியில் முகாமிட்டு போராடி வருகின்றனர்.
விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல மல்யுத்த வீரரான ’தி கிரேட் காளி’ ஆதரவு தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார். தில்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நேரடியாக சென்ற அவர் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துப் பேசினார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஜெய் ஜவான் ஜெய் கிஷான்’ என அவர் பதிவிட்டுள்ளார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ உரிமைகளுக்காக நடைபெறும் அமைதி வழியான போராட்டத்திற்கு கனடா உடன் நிற்கும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.