
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வரும் பஞ்சாபை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தில்லி எல்லையில் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.
பஞ்சாபை சேர்ந்த 29 வயது இளைஞரான சத்னம் சிங், அபு தாபியில் பணிபுரிந்து வரும் நிலையில், இரண்டு மாத விடுமுறையாக இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
தமது தாயிற்கு 70 வயதானதாலும், விவசாயியான தந்தையால் நிலத்தை கவனித்துக்கொள்ள இயலாததாலும், இரண்டு மாத விடுமுறையில் திருமணம் செய்துகொள்வதற்காக பஞ்சாப் மாநிலத்திலுள்ள சொந்த ஊரான ஜலந்தர் பகுதிக்கு வந்துள்ளார்.
சொந்த ஊருக்கு திரும்பும்போது சகோதரர் உள்பட உறவினர்கள் பலர் தில்லி எல்லையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை இளைஞர் அறிந்தார்.
இதனையடுத்து தனது திருமண பணிகளை மேற்கொண்டு நிறுத்திவிட்டு, புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கி தில்லி - ஹரியாணா எல்லை நோக்கி தமது நண்பருடன் புறப்பட்டார்.
அங்கு வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைக் கண்டு, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சத்னம் சிங்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து பேசிய இளைஞர், அபு தாபியில் நான் கூலி வேலையையே செய்து வருகிறேன். அபு தாபி செல்வதற்கு முன்பு நான் ஒரு விவசாயி.
வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களிடம் எனது நிலத்தை பறிகொடுக்க எனக்கு விருப்பமில்லை. தற்போது எனது நிலத்தை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.