வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையின் போது விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 35 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுவரையில் நடைபெற்ற மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் 6ஆம் கட்டப் பேச்சுவார்த்தை புதன்கிழமை தொடங்கியது.
இதில் மத்திய அரசின் தரப்பில் அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோரும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்நிலையில் கடந்த 35 நாள் போராட்டத்தின் போது பலியான விவசாயிகளின் குடும்பத்துக்கு மத்திய அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுவரை வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் 33 விவசாயிகள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.