வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட் உரையான இதில் நாட்டுக்கு தேவையான எதுவும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.
2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது, நாட்டின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளதாகத் தெரிவித்தார். வரிமுறையில் மாற்றம் செய்தும், நிதி ஒதுக்கீடுகளும், கல்வி மற்றும் விவசாயம் உள்ளிட்டவற்றில் புதிய திட்டங்களை வெளியிட்டார்.
இந்த நிலையில், வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட் உரையான இதில் நாட்டுக்கு தேவையான எதுவும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது,
நாடு தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை வேலைவாய்ப்பின்மை. ஆனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த உதவும் எந்த திட்டமும் இந்த பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை. இதில் அனைத்து தரப்புக்கும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்தும் எந்த திட்டமும் இடம்பெறவில்லை. அதற்கான அனைத்தும் தேவைகளும் தந்திரமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட் மத்திய அரசின் மனநிலையை பிரதிபலிக்கிறது. மிகப்பெரிய உரை மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆனால், செயல்திட்டம் எதுவும் கிடையாது. எனவே இந்த பட்ஜெட் காரணமாக நாட்டுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்தார்.