புது தில்லி: தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான மூடுபனி காரணமாக 13 ரயில்கள் தாமதமாக வந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுங்குளிர் மற்றும் மூடுபனி நிலை தொடர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்களின் சேவை தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், தில்லியில் இருந்து புறப்பட வேண்டிய 13 ரயில்கள் 4 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டன. அதன்படி, கயா-புது தில்லி மகாபோதி எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதமானது, அதைத் தொடர்ந்து பூரி-புது தில்லி புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் 3 மணி தாமதமாக இயக்கப்பட்டன.
சிங்க்ராலி-ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் 2.30 மணி நேரம் தாமதமானது, அமிர்தசரஸ்-நாந்தே சச்கண்ட் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமானது.
வாஸ்கோ-ஹஸ்ரத் நிஜாமுதீன் கோவா எக்ஸ்பிரஸ் மற்றும் பாகல்பூர்-ஆனந்த் விஹார் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸ் 1 மணி 30 நிமிடங்கள் தாமதமாகவும், ஹவுரா-புது தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ் 1 மணி நேரமும் தாமதமாகவும் இயக்கப்பட்டது.
மேலும், வட இந்தியாவின் பல பகுதிகளில் பனிமூட்டம் காரணமாகத் தில்லியிலிருந்து நேற்று 15 ரயில்கள் தாமதமாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.