
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர் வரவர ராவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புணேவின் பீமா கோரேகான் பகுதியில் கடந்த 2018-இல் வன்முறைச் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக வரவர ராவ் உள்பட சமூக ஆர்வலர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து வரவர ராவ் நவி மும்பையிலுள்ள தலோஜா சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்த நிலையில், வரவர ராவுக்கு தற்போது கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி ஜேஜே மருத்துவமனை டீன் ரஞ்சித் மங்கேஷ்வர் தெரிவித்ததாவது:
"வரவர ராவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மும்பையிலுள்ள ஜேஜே மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். அவர், கரோனா சிகிச்சைக்கான வசதிகள் இருக்கும் செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளார்."
முன்னதாக:
81 வயதுமிக்க வரவர ராவுக்கு ஏற்கெனவே உடல்நலப் பிரச்னைகள் உள்ளன. ஏற்கெனவே மே மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 3 நாள்களில் சிகிச்சை முடிந்தது. ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ளதால், அவருக்கு முழுமையாக சிகிச்சையளிக்கப்படாமல் முன்கூட்டியே மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
உடல்நலம் மற்றும் கரோனா அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார் வரவர ராவ். ஆனால், என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அவருடைய ஜாமீன் மனுவை கடந்த ஜூன் 26-ஆம் தேதி நிராகரித்தது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வரவர ராவ் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.