ராஜஸ்தானில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் வரை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் விடுதியிலேயே தங்கியிருப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தானில் சட்டப்பேரவையைக் கூட்ட மாநில அமைச்சரவை 3 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. இவற்றை திருப்பி அனுப்பிய ஆளுநர், ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட வலியுறுத்தி அனுப்பப்பட்ட 4-வது தீர்மானத்தை ஏற்று அதற்கு ஒப்புதல் அளித்தார். இதன்மூலம், ராஜஸ்தான் சட்டப்பேரவை ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்கியிருக்கும் விடுதியில், சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் கூடியது. காலை 10 மணி கூடவிருந்தக் கூட்டம், 3 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், "ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவை கூடும் வரை, எம்எல்ஏ-க்கள் விடுதியில்தான் தங்கியிருக்க வேண்டும், அமைச்சர்கள் தங்களது பணியை முடிக்க செயலகத்துக்கு செல்லலாம் என்று முதல்வர் அசோக் கெலாட் பேசினார்." என்றார் அவர்.
ராஜஸ்தான் துணை முதல்வராகவும், காங்கிரஸ் மாநிலத் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் முதல்வர் அசோக் கெலாட்.
இதைத் தொடர்ந்து கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரும் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.