மகாராஷ்டிரத்தின், புணேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட்டில் நான்கு வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகளின் தந்தை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ததையடுத்து ஜூலை 27-ம் தேதி தனது மகளைக் கொலை செய்த குற்றத்திற்காகப் பெண்ணை கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில்,
கடந்த ஜூலை 27-ம் தேதி நான்கு வயது மகள் திஷா காக்தே தனது தாயுடன் வீட்டில் இருந்துள்ளார். கணவரின் தாய் இறந்து 10வது நாள் சடங்கில் கலந்துகொள்ள குடும்பத்தினர் அனைவரும் ஊருக்குச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், ஆறு மாத கர்ப்பிணியான சவிதா காக்தே கணவர் சடங்கிற்கு அழைத்துச் செல்லாத விரக்கியில் இருந்தபோது, குழந்தை தொடர்ந்து குறும்பு செய்துகொண்டிருந்தது.
கோபத்தில் குழந்தையின் தலையைச் சுவரில் இடித்து, கழுத்தை நெரித்துக் கொன்றதாக அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ஐபிசி 302வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.