ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள் காங்கிரஸில் இணைந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) எம்எல்ஏ-க்கள் 6 பேர் கடந்தாண்டு தங்களை குழுவாக காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பாஜக எம்எல்ஏ மதன் திலவர் சார்பில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 11-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பேரவைத் தலைவர், பேரவைச் செயலர் மற்றும் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ-க்கள் 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் ஹரியாணாவில் விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் பேரவையைக் கூட்டியுள்ளார். வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது.
இந்த சூழலில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.