கல்வான் பகுதியில் படைகளை விலக்கியது சீனா: ஏஎன்ஐ
ராணுவத் தளபதிகள் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டதன்படி, கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ஆம் தேதி இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனக் கட்டுப்பாட்டிலிருந்த 10 ராணுவ வீரர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சீனத் தரப்பில் படுகாயமடைந்தவர்கள் உள்பட 43 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. உயர்மட்ட அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சீனத் தரப்பு பின்பற்றியிருந்தால் இந்தச் சூழலை தவிர்த்திருக்கலாம் என இந்தியா தெரிவித்தது.
இதையடுத்து, ஜூன் 22-ஆம் தேதி மோல்டோவில் இந்தியா, சீனா இடையே ராணுவத் தளபதிகள் நிலையில் நடைபெற்றக் கூட்டத்தில், கிழக்கு லடாக் பகுதியில் படை வீரர்களை பரஸ்பரம் விலக்கிக் கொள்வது என ஒப்புக்கொள்ளப்பட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், ராணுவத் தளபதிகள் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒப்புக்கொண்டதன்படி கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம் படைகளை விலக்கிக் கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.