தில்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிர்ப்பாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில் ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை தொடா்பாக தில்லி காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தில்லி வன்முறையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து, தில்லி வன்முறை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை கருத்துகளாக பதிவு செய்து வரும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தில்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் ஒருநாள் அனைத்து நிகழ்வுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு தில்லி வன்முறை குறித்து வெளிப்படையான விவாதத்தை நடத்தி பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யவில்லை எனில் அது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியுள்ளார்.
மேலும், 1984 சீக்கிய கலவரத்தைப் போன்று தில்லி வன்முறையும் நாட்டை உலுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.