உளுந்தூர்பேட்டை அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏமம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் கல்யாண ராஜா. விவசாயியான இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்வதற்காக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ராஜாவை (35) அணுகினார்.
அப்போது, பட்டா மாற்றம் செய்து தருவதற்காக விவசாயி கல்யாண ராஜாவிடம் இருந்து ரூ. 5,400 லஞ்சமாகப் பெற்றுள்ளார் கார்த்திக் ராஜா. இதனைக் கண்காணித்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ராஜாவைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், லஞ்சம் பெற்ற கார்த்திக் ராஜாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.