

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம், யாரும் சந்தேகத்துக்குரியவர்களாகக் கருதப்படமாட்டார்கள் என மாநிலங்களவையில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் தில்லி வன்முறை குறித்த விவாதங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) பதிலளித்தார். அப்போது பேசிய அவர்,
"என்பிஆர் குறித்து அச்சப்படத் தேவையில்லை. யாரும் சந்தேகத்துக்குரியவர்களாகக் குறிப்பிடப்படமாட்டார்கள். என்பிஆர் பதிவின்போது எந்த ஆவணங்களும் கோரப்படாது. சில தகவல்களை அளிப்பது விருப்பத்துக்குரியதாகும்" என்றார்.
தில்லி வன்முறை குறித்து மேலும் பேசிய அவர்,
"தில்லியில் நிகழ்ந்த சமீபத்திய வன்முறைக்கு காரணமானவர்கள் எந்த ஜாதி, மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அரசியல் பின்புலம் கொண்டவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆதாரங்களின் அடிப்படையில் 700 முதல் தகவல் அறிக்கைகளும், 2,600-க்கு மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இருந்து அரசு தப்பித்து செல்லவில்லை. ஹோலி பண்டிகை அமைதியான முறையில் கொண்டாடப்பட வேண்டும்.
வன்முறை தொடர்பான விடியோக்களின் விரிவான ஆய்வு முடிந்துவிட்டது. முக அடையாளத்தைக் கண்டறியும் மென்பொருள் மூலம் அடையாளம் காண ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை பயன்படுத்தப்படுகிறது. தனிமனித சுதந்திரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல்களை மீறவில்லை. ஆதார் தரவுகள் இதற்குப் பயன்படுத்தப்படவில்லை. இந்த மென்பொருள் மூலம் 1922 முகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.