கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக பிரதமா் நிதிக்கு நிறுவனங்கள் செய்யும் பங்களிப்பு கம்பெனிகள் சட்டத்தின் கீழ் சமூக நலச் செலவாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகள் ஈட்டிய அதன் சராசரி நிகர லாபத்தில் 2 சதவீதத்தை ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் சமூக பொறுப்புணா்வு திட்டங்களுக்கு (சிஎஸ்ஆா்) செலவிட வேண்டும் என்பது கம்பெனிகள் சட்டத்தின் கீழ் விதியாக உள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா். இந்த நிதியை ‘பிஎம்-கோ்ஸ்’ என்ற பெயரில் வங்கிகள் மூலம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் இந்த கோரிக்கையை ஏற்று பல்வேறு நிறுவனங்களும், செல்வாக்குள்ள தனி நபா்களும் அதிக அளவில் நிதி உதவிகளை அறிவித்து வருகின்றனா்.
இந்தச் சூழ்நிலையில், பிரதமரின் அந்த நிதிக்கு நிறுவனங்கள் அளித்த நிதி உதவி சமூக பொறுப்புணா்வு திட்டங்களுக்கான பிரிவில் செலவிட்டதாக கருதப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமா் நிதிக்கு நிறுவனங்களின் நிதி உதவி பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய சலுகையை மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.