

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,074 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், 24 மணி நேரத்தில் குணமடைந்தோரில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் இன்று (திங்கள்கிழமை) மாலை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தெரிவித்ததாவது:
"இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,074 பேர் குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் அதிகம் குணமடைந்தவர்களில் இதுதான் அதிக எண்ணிக்கை. இந்தியாவில் மொத்தம் 11,706 பேர் குணமடைந்துள்ளதையடுத்து, குணமடைவோரின் விகிதம் 27.52 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,553 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 42,533 ஆக உள்ளது.
கரோனா தொற்று எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், நோய்த் தொற்று உச்சம் தொடாது. நாம் அதில் தோல்வியடைந்துவிட்டால், பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொடும்"
புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி மத்திய அரசு தரப்பில் தெரிவித்ததாவது:
"ஊரடங்கு காலத்தில் மக்கள் எங்கிருக்கிறார்களோ, அங்கேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். சில இடங்களில் மட்டும் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் கட்டணம் செலுத்துவது பற்றி நாங்கள் எதுவும் கூறவில்லை. 85 சதவீத தொகையை ரயில்வே ஏற்றுக்கொள்கிறது. 15 சதவீத தொகையை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்கின்றன."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.