

புது தில்லி-: "கரோனா பிரச்னையால் உலகமயமாக்கலில் புதிய பரிமாணத்துக்கான அவசியம் எழுந்துள்ளது; இது, சமத்துவம், மனிதாபிமானம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அணி சேரா இயக்கத்தில் (நாம்) அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி முறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:
பல தசாப்தங்களில் இல்லாத மிகத் தீவிரமான பிரச்னையை மனித குலம் தற்போது எதிர்கொண்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட அணி சேரா இயக்கம் உதவ முடியும். உலக அளவில் நேர்மையின் குரலாக ஒலிக்கும் அணி சேரா இயக்கம், இப்போதும் தனது பங்களிப்பை நல்க வேண்டும். இதற்காக நாம் இணைந்து செயலாற்ற வேண்டும்.
உலகமே கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும்போதும், சிலர் வேறு வகையான கொடிய தொற்றுகளை பரப்புவதில் பரபரப்பாக செயல்படுகின்றனர். பொய் செய்திகள், போலியான விடியோக்களை பரப்பி, நாடுகளுக்கு இடையேயும் சமூகங்களுக்கு இடையேயும் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஆனால், கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக உண்மையான மக்கள் இயக்கத்தை உருவாக்குவதில் ஜனநாயகம், ஒழுக்கம், முடிவெடுக்கும் திறன் ஆகியவை எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதை உலகுக்கு இந்தியா காட்டியுள்ளது.
உள்நாட்டில் தேவை இருப்பினும், உலக அளவில் 120 நாடுகளுக்கு இந்தியா மருந்துகளை வழங்கியுள்ளது. இதில் 59 நாடுகள், அணி சேரா இயக்கத்தின் உறுப்பு நாடுகள்.
கரோனா பிரச்னையானது, உலகின் தற்போதைய அமைப்புமுறையில் உள்ள இயலாமைகள் என்ன என்பதை உணர்த்தியுள்ளது. தற்போதுள்ள சர்வதேச அமைப்புகளுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அவசியமாகிறது. மேலும், உலகமயமாக்கலில் புதிய பரிமாணத்துக்கான தேவை எழுந்துள்ளது. இது சமத்துவம், மனிதாபிமானம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாது மனித குலத்தின் நலனையும் ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்றார் பிரதமர் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.