

வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி நாட்டில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களைத் திறக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
முன்னதாக நாடு முழுவதும் கல்லூரிகளை வரும் செப்டம்பா் மாதம் திறக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
கரோனா நோய்ப் பரவல் இந்தியாவில் தொடங்கியது முதல் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடுவதைத் தடுக்க அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால் பல தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த மாா்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17-க்குப் பிறகு என்ன நிலவரம் என்பது தற்போது தெரியாது. ஊரடங்கு முழுமையாக எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரித் தோ்வுகளை ஏற்கெனவே ஒத்திவைத்தது. இந்தநிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தோ்வுகளை நடத்துவது என்பது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் வரும் செப்டம்பா் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.