கடந்த 24 மணி நேரத்தில் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தில்லியில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி வந்த இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் தில்லி காவல்துறையுடன் இணைந்து தில்லியில் சட்டம் -ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், இவர்களது படைப்பிரிவில் இருந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பலரது பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது.