தேனீ வளர்ப்பு மற்றும் கால்நடை நோய்த்தடுப்பு மருந்துக்கு நிதி ஒதுக்கித் தற்போது வெளியிட்ட அறிவிப்பு, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிதானா, புதிதாக அனுமதிக்கப்படுகிறதா என்பதை நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்த வேண்டும் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
"2020-21 பட்ஜெட்டில் தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் தேனீ வளர்ப்புக்கென ரூ. 2,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பட்ஜெட்டிலேயே தேசிய கால்நடை நோய் (கோமாரி ) தடுப்பு திட்டத்திற்காக 5 ஆண்டுகளுக்கு ரூ. 13,343 கோடி அறிவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. 2020-21- நிதியாண்டில் இதற்கென ரூ. 1,300 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிதியமைச்சர் வெள்ளிக்கிழமை அறிவித்த நிதி ஒதுக்கீடு (தேனீ வளர்ப்புக்கு ரூ. 500 கோடி மற்றும் கால்நடை நோய்த் தடுப்புக்கு ரூ. 13,343 கோடி) பட்ஜெட் அறிவிப்புக்குள் உள்ளடக்கியதுதானா அல்லது கூடுதலாக நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்" என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான 'சுயசார்பு இந்தியா' என்ற திட்டம் பற்றி வெள்ளிக்கிழமை அறிவித்த நிர்மலா சீதாராமன், தேனீ வளர்ப்புக்காக ரூ. 500 கோடியும், கால்நடைகளுக்கான தடுப்பு மருந்துக்காக ரூ. 13,343 கோடியும் ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.