

சிறப்பு ராஜ்தானி ரயில்களை இயக்கியதன் மூலமாக இந்திய ரயில்வே ரூ. 76 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து வகையான பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, மே 1-ஆம் தேதி முதல் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு வரை மட்டும் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு ரயில்கள் மூலம் பயணித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மே 12 முதல் 15 ராஜ்தானி ரயில்கள் (எதிர் தடத்திலும் 15 ரயில்கள்) இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே மே 10-ஆம் தேதி அறிவித்தது. இதற்கான முன்பதிவும் மே 11-ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், ஒரு வாரத்தில் 3.80 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 2.05 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் இந்திய ரயில்வே சுமார் 76.22 கோடி வருவாய் ஈட்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சிறப்பு ராஜ்தானி ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை 30,039 பயணிகள் பயணித்த நிலையில், திங்கள்கிழமை 26,830-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.