மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சட்டமேலவை உறுப்பினராக இன்று (திங்கள்கிழமை) பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 9 சட்டமேலவை உறுப்பினர் இடங்கள் காலியாக இருந்தன. இதற்கான தேர்தல் மே 14-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 9 இடங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்பட சரியாக 9 பேர் மட்டுமே போட்டியிட்டதால், போட்டியிட்ட அனைவரும் போட்டியின்றித் தேர்வாகினர்.
இந்த நிலையில், மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார் உத்தவ் தாக்கரே. அப்போது சட்டமேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரே பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, ஆளுநர் பகத் சிங் கோஷியாரி உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.