கோவாவில் உள்ள கரோனா மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள் மேலும் அதிகரித்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் தொற்றுக்கு நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்து வருகின்றது. கரோனா தொற்றை ஒழிக்க மருத்துவர்கள் பலவகையிலும் தொடர்ந்து போராடி வருகின்றனர். உலகளவில் இதுவரை கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கரோனா இல்லாத பச்சை மண்டலமாக இருந்த கோவாவில் தற்போது புதிதாக 50 பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்த மாநில அரசு பல முயற்சிகளை எடுத்துவருகின்றது. இதில், ஒன்றாக கரோனா மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகளை மேலும் அதிகரித்துள்ளது.
முன்னதாக, கரோனா மருத்துவமனையிலிருந்த 60 படுக்கைகளை தற்போது 170 படுக்கைகளாக ஆக உயர்த்தியுள்ளது. தேவைப்பட்டால் மேலும் 200 படுக்கை வகதிகளை சுமார் ஒரு மணி நேரத்தில் தயார் செய்ய முடியும் என்று மருத்துவ இயக்குநர் இரா, டீன் பந்தேகர் மற்றும் சுகாதார செயலாளர் நிலா மோகனா தெரிவித்துள்ளனர்.
ஒரே இரவில் படுக்கை வசதிகளை இரட்டிப்பாக அதிகரித்த மருத்துவக் குழுவிற்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பாராட்டத்தக்க வேலையைச் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து முன்னணி ஊழியர்களையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ரானே டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.