மகாராஷ்டிர கட்டட வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. தற்காலிகமாக அப்போது முடிக்கப்பட்ட வழக்கு தற்போது மகாராஷ்டிர அரசின் உத்தரவின் பேரில், சிபிஐ மீண்டும் வழக்கின் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக மும்பை காவல்துறையினர் அர்னாப் கோஸ்வாமியை புதன்கிழமை கைது செய்துள்ளனர். இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை அலிபாக் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவரை விசாரிக்க வேண்டி இருப்பதால் அவரை விசாரணைக் காவலில் எடுக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமி நவம்பர் 18 வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டது.