

அர்னாப் கோஸ்வாமி வழக்கு காரணமாக மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரி மற்றும் மகாராஷ்டிர அரசு இடையே புதிய மோதல் ஏற்பட்டுள்ளது.
கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 18 வரை நீதிமன்றக் காவலில் உள்ள அவர் தற்போது தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை இன்று (திங்கள்கிழமை) தொடர்புகொண்டு அர்னாப் கோஸ்வாமியின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை குறித்து பேசினார். மேலும் அர்னாபின் குடும்பத்தினர் அவரைச் சந்தித்து பேச அனுமதிக்குமாறும் வலியுறுத்தினார்.
இதையடுத்து, முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவிக்கையில், அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அரசின் அணுகுமுறை குறித்து மும்பை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ஆளுநரும், ஃபட்னவீஸும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பக்கம் துணை நிற்காமல் குற்றம்சாட்டப்பட்டவர் உடன் துணை நிற்பதாக சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் விமரிசனம் செய்தனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் அனில் பரப் தெரிவிக்கையில், சட்டத்தின் முன் குற்றம்சாட்டப்பட்டவருக்காக வருந்தாமல், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்காக ஆளுநர் வருத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் தெரிவிக்கையில், ஆளுநரின் நிலைப்பாடும், எதிர்க்கட்சியான பாஜகவின் நிலைப்பாடும் பல்வேறு விவகாரங்களில் ஒத்துப்போவது துரிதிருஷ்டவசமானது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.