கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கு தொடர்பாக ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் உள்ள அவர் செல்போன் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார்.
அர்னாப் கைது செய்யப்பட்டு 6 நாள்கள் ஆன நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், அலிபாக் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்யுமாறும், மனு மீது நான்கு நாள்களுக்குள் தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்குமாறும் மும்பை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டதையடுத்து அலிபாக் நீதிமன்றத்தில் அர்னாப் தரப்பில் ஏற்கெனவே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.