புது தில்லி: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக வாக்களித்த சுமார் 4 கோடி வாக்களர்களில் 7 லட்சம் பேர், மேற்கண்ட எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளனர்.
பிகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை காலை எண்ணப்பட்டன. இதில், 6,89,135 பேர் அதாவது 1.69 சதவீதம் பேர் நோட்டாவுக்கு தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர். தங்களது தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை, அதேவேளையில், தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக நோட்டா முறை கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. 'பிகாரில் நிதிஷ் குமாரின் வெற்றியை உறுதி செய்தது இவர்கள்தானாம்'
முன்னதாக, நோட்டாவுக்கு பதிலாக, விண்ணப்பம் 49-ஓ என்ற படிவத்தை வாக்காளர்கள், வாக்குச்சாவடி அதிகாரியிடமிருந்து பெற்று அதனை நிரப்பி அளிக்க வேண்டும். ஆனால், இவ்வாறு விண்ணப்பத்தை நிரப்பி அளிப்பது, வாக்களர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற தேர்தல் விதிக்கு எதிரானது என்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலேயே நோட்டா என்ற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதையும் படிக்கலாம்.. பள்ளி, கல்லூரிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு: தமிழக அரசு தகவல்
அதேவேளையில், ஒரு தொகுதியில் அதிகப்படியான வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தால், அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்துவிட்டு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் சில தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விடவும், நோட்டா பெற்ற வாக்குகள் அதிகம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.