கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி நவம்பர் 4-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஃபெரோஸ் ஷேக், நிதீஷ் சார்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்க மறுத்து, மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ரூ. 50,000 பிணைத் தொகை செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கப்பட்டது.
மேலும், வழக்கின் ஆதாரங்களை அழிக்கக் கூடாது என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அவர்களது விடுதலையை தாமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.