பாட்னா: பிகார் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க மகா கூட்டணி முடிவு செய்துள்ளது.
நடந்த முடிந்த தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான முடிவையே அளித்தது, ஆனால், அது மோசடியால் மாற்றப்பட்டுவிட்டது என்று மகா கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் உள்பட ஐந்து கட்சிகள் இணைந்து அமைக்கப்பட்ட மகா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளுமே, பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை ஒருமனதாக எடுத்துள்ளன.
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிதீஷ் குமாா், அந்த மாநிலத்தின் முதல்வராக இன்று பதவியேற்கவுள்ளாா். அவருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
பிகார் முதல்வராக நிதீஷ் குமாருக்கும், அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 13 பேருக்கும் ஆளுநர் பாகு சௌஹான் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
நிதீஷ் குமாருடன், தார்கிஷோர் பிரசாத் (துணை முதல்வர்), அஷோக் சௌதரி, விஜய் சௌதரி, மேவா லால் சௌதரி, பிஜேந்திர யாதவ், ரேணு தேவி, மங்கல் பாண்டே, பிரேம் குமார், சம்ராட் சௌதரி, நிதிஷ் மிஷ்ரா, நந்த்கிஷோர் யாதவ், முகேஷ் சஹானி, ஜிதன் ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ் குமார் ஷரண் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.
ஆளுநா் மாளிகையில் இன்று மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் பங்கேற்க விருப்பதாக ஏஎன்ஐ செய்திகள் உறுதி செய்துள்ளன.