மெஹபூபாவுடன் ஃபரூக், ஒமர் அப்துல்லா சந்திப்பு
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லாவை மெஹபூபா முஃப்தி இன்று (புதன்கிழமை) அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவருமான மெஹபூபா முஃப்தி செவ்வாய்க்கிழமை இரவு தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஸ்ரீநகரிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஃபரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லாவை இன்று சந்தித்தார் மெஹபூபா.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஒமர் அப்துல்லா சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"தடுப்புக் காவலிலிருந்து விடுதலையான மெஹபூபாவை இன்று பிற்பகல் சந்தித்து நானும் தந்தையும் நலம் விசாரித்தோம். குப்கர் பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களுடன் நாளை பிற்பகல் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க ஃபரூக் விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார்."
முன்னதாக பிடிபி கட்சித் தலைவர்களையும் மெஹபூபா சந்தித்தார்.