2019-ஆம் ஆண்டு நிலவரப்படி தினக்கூலி மற்றும் விவசாயத்தை சேர்ந்த 43,000 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்றப்பதிவு பணியகம் தெரிவித்துள்ளது.
32,563 தினக்கூலி தொழிலாளர்கள் வருவாயின்றி தற்கொலை செய்துகொண்டனர். நாட்டின் மொத்த தற்கொலையில் 23.4 சதவிகிதத்தினர் தினக்கூலிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு 30,132 தினக்கூலிகள் தற்கொலை செய்துகொண்டதாக பதிவாகியுள்ளது.
இதேபோன்று விவசாயத்துறையில் 10,281 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. இதில் 5,957 விவசாயிகளும், 4,324 விவசாய கூலிகளும் அடங்குவதாக தேசிய குற்றப்பதிவு பணியகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் மொத்த தற்கொலை விகிதத்தில் 7.4 சதவிகிதமாக உள்ளது.
மேலும் தற்கொலை செய்துகொண்ட 5,957 விவசாயிகளில் 3,749 ஆண்கள், 575 பெண்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவாக 38.2 சதவிகித விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 19.4 சதவிகிதத்தினரும், ஆந்திரத்தில் 10 சதவிகிதத்தினரும், மத்தியப்பிரதேசத்தில் 5.3 சதவிகிதத்தினரும், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவில் 4.9 சதவிகித விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டதாக பதிவாகியுள்ளது.