நாடாளுமன்ற அமர்வில் கேள்வி நேரத்தை வேண்டாம் என்று கைவிட்ட மத்திய அரசு, மாணவர்களை மட்டும் தேர்வு எழுதச் சொல்கிறார்கள் என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பினார்.
அனைத்திந்திய மஸ்ஜிதே இதிஹாதுல் முஸ்லிம் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, நாடாளுமன்ற அமர்வில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கரோனா காலத்தில் கூடும் நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் மோடி கேள்வி நேரத்தை ரத்து செய்கிறார். ஆனால், மாணவர்களை மட்டும் நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதச் சொல்கிறார்.
கேள்வி நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் கரோனா நெருக்கடி குறித்து கேள்விகளை எழுப்ப முடியுமா, கேள்வி நேரம் இல்லாததால் கிழக்கு லடாக்கில் என்ன நடக்கிறது என்பது பற்றி விவாதங்களை நடத்த முடியுமா என்பது எங்களுக்குத் தெரியாது என ஒவைசி தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தொடர்பான பிரச்னைகள் குறித்து பல நாடுகளின் பிரதமர்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி வருவதாகவும், அதே நேரத்தில் மோடி விடியோ செய்திகளை மட்டும் வெளியிடுகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.