மனிதர்கள் மலம் அள்ளுவதை தடை செய்யும் வகையில் தனித் திருத்த மசோதாவை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நடப்பாண்டில் தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மனிதர்கள் மலம் அள்ளுவதை கடுமையாக தடை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் திங்கள் கிழமை முதல் துவங்க உள்ளது.
சாக்கடைகளை முழுக்க முழுக்க இயந்திரங்கள் கொண்டு அள்ளும் வகையிலும், தூய்மைப் பணியின்போது விபத்து நேரிட்டால் இழப்பீடு வழங்கும் வகையிலும் மலம் அள்ளும் தொழிலுக்கான தடை மற்றும் புனர்வாழ்வு சட்டம் 2020 கொண்டுவரப்பட உள்ளது.
தற்போது, எந்தவொரு நபரும் அல்லது ஏஜென்சியும் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை அபாயகரமாக சுத்தம் செய்வதற்காக எந்தவொரு நபரையும் ஈடுபடுத்தினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
தற்போது உருவாக்கப்பட உள்ள சட்டத்தின் மூலம் சாக்கடை அள்ள கட்டாயப்படுத்தினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதத் தொகை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு குளிர்கால கூட்டத்தொடருக்காக தயாரிக்கப்பட்டுள்ள 23 மசோதாக்களில் மலம் அள்ளும் தொழிலுக்கான தடை மற்றும் புனர்வாழ்வு சட்டம் 2020 மசோதாவும் இணைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு பணியின்போது உயிரிழப்புகள் அதிகரித்தபோது இந்த திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.
மலம் அள்ளும் தொழிலுக்கான தடை மற்றும் புனர்வாழ்வு சட்டம் 2003-ன் படி சுகாதாரமற்ற கழிவறைகளை சுத்தம் செய்தல், கைகளில் மலம் அள்ளுதல் போன்வை தடை செய்யப்படுகிறது. இதனிடையே இந்த சட்டத்தில் கடுமையான சில திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளது.