விவசாயிகள் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் தனது பதவியை ராஜினாமா செய்தார்
மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகியவற்றிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை மத்திய அரசில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகுவார் என சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரின் ராஜினாமா கடிதம் பிரதமர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் பதவி விலகல் அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.