மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சியினர் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
குடியரசுத் தலைவரைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்ததாவது:
"வேளாண் மசோதாக்களை கொண்டு வருவதற்கு முன்பாக அனைத்துக் கட்சிகளிடமும், விவசாயத் தலைவர்களிடமும் அரசு கருத்து கேட்டிருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் தகர்க்கப்படுகிறது. சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், திருப்பி அனுப்ப வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினோம்."
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவையில் 3-இல் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றும்போது, எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.