கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான போராட்டத்தில் ஒற்றுமை ஒளியை ஏற்றும்விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் விளக்கேற்றினார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் தனிமையில் இல்லாததை உணர்த்தவும் நோய்த் தொற்றுக்கு எதிராக 130 கோடி மக்களும் ஒன்றுபட்டு இருப்பதை உணர்த்தவும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டிலுள்ள மின் விளக்குளை அணைத்துவிட்டு, அகல் விளக்கு போன்றவற்றை ஒளிரச் செய்ய வேண்டும் என்று காணொலி வாயிலாக பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளிலும், கட்டங்களிலும் ஒளியேற்றினர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் தனது இல்லத்தில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்கேற்றினார். இந்த விடியோ தற்போது வெளியாகியுள்ளது.