கரோனா பாதித்து உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவதை அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆயுள் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
ஆயுள் காப்பீடு எடுத்திருந்த ஒருவர் கரோனா பாதித்து உயிரிழக்க நேரிட்டால், அவரது குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே, கரோனா பாதித்தவர்கள் மரணம் அடைந்து காப்பீடு கோரியிருந்தால், அதனை செலுத்துவதற்கான நடைமுறைகளை தொடங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் கால இறப்புகள் போன்ற (Force Majeure) பிரிவுகள் கரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளுக்கு பொருந்தாது. ஏன் என்றால் அந்த பிரிவு, கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுப்பாட்டில் இல்லாத சம்பவங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
கரோனா பாதிப்பினால் உயிரிழப்பு நேரிட்டால் காப்பீடு தொகை வழங்கப்படாது என்ற தவறான தகவல்கள் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆயுள் காப்பீட்டுக் கழகம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த மோசமான நேரத்தில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களின் பக்கம் நிற்பதையும், அவர்களுக்குக் கிடைக்கும் தவறான தகவல்களால் ஏற்படும் குழப்பங்களில் இருந்து தெளிவு பெறவும் உதவ வேண்டும் என்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் கூறியுள்ளது.