புது தில்லி: இந்தியாவில் செவ்வாய்க்கிழமை மாலை வரை 4,421 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 4,421 பேரில், கடந்த 24 மணி நேரத்தில் 354 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஒரே நாளில் இந்தியாவில் கரோனா பாதித்த 8 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் மத்திய நல்வாழ்வுத் துறை கூறியுள்ளது.
மேலும், அதிக கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்ட தில்லி, மும்பை, பில்வாடா, ஆக்ரா ஆகிய பகுதிகளுக்கு என தனியாக கரோனா தடுப்பு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒரு கரோனா தொற்று பாதித்த நோயாளி, மருத்துவ அறிவுறுத்தல்படி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்தால், 30 நாட்களில் அவர் மூலமாக 406 பேருக்கு கரோனா பரவும் அபாயம் இருப்பதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாகவும் மத்திய நல்வாழ்வுத் துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதியோடு நிறைவடையவிருக்கும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, ஊகங்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் மத்திய நல்வாழ்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.