இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,363 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 339 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 1036 ஆக உள்ளது.
இதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,211 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 179 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் இதுவரை 2,31,902 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.