புது தில்லி: கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவும் என்றும், கரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் விரைவாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உரையாற்றிய விடியோவை கட்சி சார்பில் வெளியிடப்பட்டது.
அதில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது, நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். ஊரடங்கைப் பின்பற்றினால் மட்டுமே கரோனாவை நாம் வெல்ல முடியும், இதற்கு அனைவரது ஆதரவும் தேவை.
நாடு மிகப்பெரிய போரை எதிர்கொண்டுள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் தங்களது பொறுப்பினை உணர்ந்து, நாட்டு மக்களுக்கு உதவ வேண்டும். உதவி தேவைப்படுவோர் யார் வேண்டுமானாலும் மாநில அளவிலும் சரி, மத்திய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு எங்கள் உதவியைப் பெறலாம் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ இல்லையோ, நாட்டு மக்களுடன் அவர்களது போராட்டத்தில் ஒன்றாக இருக்கும் என்றும் சோனியா தெரிவித்துள்ளார்.