புது தில்லி: இந்திய அளவில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வந்தாலும், நல்ல செய்தியாக, ஏற்கனவே கரோனா பாதித்த நோயாளிகள் இருக்கும் 25 மாவட்டங்களில்ல் கடந்த 2 வாரங்களாக யாருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
இந்தியாவில் உள்ள 15 மாநிலங்களைச் சேர்ந்த 25 மாவட்டங்களில், ஏற்கனவே கரோனா பாதித்த நோயாளிகள் கண்டறியப்பட்ட நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் இந்த மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செயயப்படவில்லை.
இதில், மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா, புதுச்சேரியின் மாஹே, பிகாரின் பாட்னா, நலந்தா, முங்கெர், கோவாவின் தெற்கு கோவா, கேரளத்தின் கோட்டயம், வயநாடு உள்பட 25 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சி தரும் தகவலாக உள்ளது.
தில்லியில் நேற்று செய்தியாளா்களைச் சந்தித்த சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால், 15 மாநிலங்களில் உள்ள 25 மாவட்டங்களில் முன்னதாகவே துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்த மாவட்டங்களில் கடந்த 14 நாள்களில் ஒருவருக்கு கூட புதிதாக கரோனா நோய்த்தொற்று ஏற்படவில்லை. இது ஒரு நல்ல செய்தியாகும்.
அடுத்த 6 வாரங்களில் சோதனை செய்வதற்கான உபகரணங்கள் அனைத்தும் நம்மிடம் தயாராக உள்ளன. எனவே, இந்த விஷயத்தில் நாம் கவலையடைய தேவையில்லை என்றாா்.