

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் பலியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள இறப்பு விகிதம் சுமார் 3.3 சதவீதமாக உள்ளது. 45 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம் 14.4 சதவீதம். 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம் 10.3 சதவீதம், 60-75 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம் 33.1 சதவீதம் மற்றும் 75 வயதுக்கு மேல் உள்ளவர்களின் இறப்பு விகிதம் 42.2 சதவீதம்.
இதில் 83 சதவீதம் பேருக்கு, வேறு நோய் தொடர்பான பிரச்னைகள் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 1,992 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் சதவீதம் சுமார் 13.85 ஆக உள்ளது. நேற்று முதல் கூடுதலாக 991 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,378 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 43 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது.
23 மாநிலங்களுக்குட்பட்ட 47 மாவட்டங்களில் நம்பிக்கையளிக்கக்கூடிய போக்கு காணப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள மாஹி, கர்நாடகத்தில் உள்ள குடகு ஆகிய பகுதிகளில் கடந்த 28 நாள்களாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. மற்ற 45 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களாக புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
14,378 பேரில் 4,291 பேர் (29.8 சதவீதம்) தில்லி மாநாட்டுக்குத் தொடர்புடையவர்கள். தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரில் 84 சதவீதம் பேர், தில்லியில் மொத்தம் பாதித்தோரில் 63 சதவீதம் பேர், தெலங்கானாவில் மொத்தம் பாதித்தோரில் 79 சதவீதம் பேர், உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் பாதித்தோரில் 59 சதவீதம் பேர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் பாதித்தோரில் 61 சதவீதம் பேர் தில்லி மாநாட்டில் தொடர்புடையவர்கள்." என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.